சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 72-வது தேசியத் திரைப்பட விருதுகளில் ‘ராயன்’ மற்றும் ‘கேப்டன் மில்லர்’ ஆகிய படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தகுதியான பல தமிழ் திரைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டு இந்த இரு படங்களுக்கு விருது அளிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தேர்வுக்குழு நடுவர்களில் ஒருவரான நடன இயக்குநர் கலா மாஸ்டர் மீதும் இணையத்தில் கடுமையாகக் விமர்சிக்கப்பட்டு உருவக்கேலிகள் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் இரா.சரவணன், கலா மாஸ்டரை நடுவராகத் தேர்வு செய்தது முற்றிலும் சரியே என்றும், அவரை உருவக்கேலி செய்வது நாகரிகமற்ற செயல் என்றும் சாடியுள்ளார்.
திரைப்படம் பற்றிய புரிதலும் அனுபவமும் கலா மாஸ்டருக்கு ஏராளமாக உள்ளது என்றாலும், தகுதியான பல படங்களை விட்டுவிட்டு ராயன் தான் மிகச்சிறந்த படம் என அவர் அளித்த பேட்டியைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என இயக்குநர் இரா.சரவணன் சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது கலா மாஸ்டரை நடுவராகத் தேர்ந்தெடுத்தது சரி, ஆனால் அவர் விருதுக்குத் தேர்ந்தெடுத்த படங்கள்தான் தவறு என அவர் தனது பார்வையைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார். உண்மையான தகுதியான படங்களைத் தவறவிட்டுவிட்டு இதுபோன்ற தேர்வுகளைச் செய்தது நியாயமா என்ற கேள்வி மட்டுமே தனது ஆதங்கம் எனக் குறிப்பிட்டுள்ள இவரது பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
