CINEMA
‘பொற்காலம்’ விமர்சனத்தில் நான் சொன்ன அந்த ஒரு வார்த்தை… சேரன் ஆஃபிஸுக்கு வந்து பொங்கிட்டாரு- ஜேம்ஸ் வசந்தன் பகிர்ந்த தகவல்!
சிலரை அறிமுகப்படுத்தும் போது அவரை என்ன சொல்லி அறிமுகப்படுத்துவது என்ற குழப்பம் வரும். அந்த அளவுக்கு பல துறைகளில் தங்கள் திறமையைக் காட்டிலும் அனைத்திலும் சாதித்திருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் ஜேம்ஸ் வசந்தன். மெல்லிசைக் குழு நடத்துனராக, இசைப் பயிற்சியாளராக, தமிழ் ஆர்வலராக, நிகழ்த்தித் தொகுப்பாளராக, இசையமைப்பாளராக, பாடல் ஆசிரியாக, இயக்குனராக பல முகங்கள் கொண்டவர் ஜேம்ஸ் வசந்தன்.
இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்ற கனவோடு சென்னை வந்த ஜேம்ஸ் வசந்தன் முதலில் இசை நிகழ்ச்சி தொகுப்பாளராக சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் டாப் 10 மூவிஸ் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அப்போது தான் சந்தித்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதில் “நாங்கள் எல்லா படத்துக்கும் விமர்சனம் செய்யும் போது இறுதியில் படத்தைப் பற்றி ஒரு வரியில் பன்ச் ஒன்று சொல்வோம். அது ரசிகர்களுக்கு பிடித்துப் போனதால் நான் என்ன சொல்லப் போகிறேன் என்று எதிர்பார்க்க ஆரம்பித்தார்கள். அப்படி எனக்குப் பிடிக்காமல் நான் சேரனின் பொற்காலம் படத்துக்கு ஒரு வார்த்தையை சொல்லும்படி ஆகிவிட்டது.
அந்த படம் எனக்குப் பிடித்திருந்தது. ஆனாலும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் படம் பற்றி பேசி முடிக்கும் போது ‘பொற்காலம் – கற்காலம்’ என சொல்ல சொல்லி வற்புறுத்தினார்கள். நானும் வேறு வழியில்லாமல் சொல்லிவிட்டேன். நிகழ்ச்சி ஒளிபரப்பானதும் இயக்குனர் சேரன் அலுவலகத்துக்கே வந்து கோபமாக பேசினார்.
ஏன் ஒரு படத்தைப் பற்றி இவ்வளவு எதிர்மறையாக பேசுகிறீர்கள். படம் நன்றாக இருப்பதால் மக்கள் ரசித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஏன் நீங்கள் இப்படி கலைஞர்களை அவமதிக்கிறீர்கள். நல்ல ஆக்கபூர்வமான விமர்சனங்களை சொல்லுங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என கோபமாக பேசிவிட்டு போனார்” என்று தெரிவித்துள்ளார். அதே போல தன்னுடைய நிகழ்ச்சியின் தாக்கத்தால் சத்யராஜ் ஒரு படத்தில் தன்னை மறைமுகமாக தாக்கி பேசுவது போல ஒரு காட்சி வைத்ததாகவும் கூறியுள்ளார்.