தமிழ் சினிமாவில் தன்னுடைய கதைகளில் ரௌத்திரத்தை ஏற்றி பார்வையாளர்களை திகைத்துப் போக வைக்கும் படங்களை எடுத்தவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கிய சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்கள் அவற்றின் உருவாக்கத்தால் இன்றளவும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கின்றன.
அவர் படங்களில் நடித்த பின்னர்தான் விக்ரம், சூர்யா மற்றும் ஆர்யா ஆகியோர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தனர். அதனால் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பல இளம் ஹீரோக்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர் படங்களில் கதாநாயகர்கள் பெரிய அளவுக்கு உயர்ந்தாலும், கதாநாயகிகள் போன இடம் தெரியாமல் காணாமல் போனார்கள்.
பாலா தன்னுடைய சுயசரிதைப் புத்தகமான ‘இவன்தான் பாலா’வில் தன்னுடைய வாழ்க்கையை எந்த ஒளிவு மறைவுமின்றி பகிர்ந்துள்ளார். ஒரு போக்கிரியாக இருந்த தன்னை சினிமாதான் மனிதனாக்கியது என்று கூறியுள்ளார். அப்படி அவரை பண்படுத்தியதில் அவரின் குருநாதரான பாலு மகேந்திராவுக்கு முக்கியமானப் பங்குண்டு.
நான் கடவுள் படம் பாலா இயக்கியதில் முக்கியமானப் படம். அந்த படம் ஆறு ஆண்டுகாலம் உருவாக்கத்தில் இருந்து பின்னர் வெளியானது. முதலில் இந்த படத்தில் அஜித்தான் கதாநாயகனாக நடிப்பதாக இருந்தார். இதற்காக அஜித் தாடி முடி எல்லாம் வளர்த்து வந்தார். ஆனால் இடையில் பாலா மற்றும் அஜித் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தில் இருந்து அஜித் விலக பின்னர் ஆர்யா கதாநாயகனாக இணைந்தார்.
இந்நிலையில் பல ஆண்டுகள் குறித்து நான் கடவுள் படம் பற்றி இயக்குனர் பாலா ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் கடவுள் படத்துக்கு அஜித் பொருத்தமானவர் என்று தேர்வு செய்யவில்லை. இரண்டு பேரும் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என எங்களுக்கு ஆசை இருந்தது. அதனால்தான் அவர் அந்த படத்தினுள் வந்தார். ஆனால் கடைசியில் அது நடக்கவில்லை.” எனக் கூறியுள்ளார்.