தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 76 வயதான பெண் மருத்துவர் அந்த பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனையில் உறைவிட மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த ஐந்தாம் தேதி அவருடைய செல்போனுக்கு தெரியாத ஒரு நம்பரில் இருந்து whatsapp வீடியோ அழைப்பு வந்துள்ளது. அதனை அவர் எடுத்துப் பேசிய நிலையில் எதிர் முனையில் தோன்றிய அந்த நபர் பெங்களூரு நகர போலீசார் உடையில் இருந்தார். அவன் சுப்ரீம் கோர்ட், அமலாக்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கியின் முத்திரை இட்ட ஆவணங்களை காட்டி நீங்கள் ஒருவரை கடத்தியதாக புகார் வந்துள்ளது.
அதனால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது டிஜிட்டல் முறையில் உங்களை கைது செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்த நிலையில் நாங்கள் கேட்கும் பணத்தை கொடுத்தால் இந்த சிக்கலில் இருந்து நீங்கள் வெளிவரலாம் என்று அந்த நபர் கூறியுள்ளார். மறுநாள் மீண்டும் அழைப்பு வந்த நிலையில் அவர் தன்னுடைய ஓய்வூதிய கணக்கிலிருந்து ஆறு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு மாற்றி உள்ளார்.
அந்த வங்கிக் கணக்கு மராட்டிய மாநிலத்தில் இருப்பதாக காட்டியுள்ளது. அத்தோடு பிரச்சனை முடிந்து விட்டது என்று நினைத்து அவருக்கு மீண்டும் whatsapp வீடியோ கால் வந்துள்ளது. அப்போதும் மிரட்டப்பட்ட நிலையில் சுமார் 70 மணி நேர சித்திரவதையால் பெண் டாக்டருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர் உயிரிழந்த பிறகும் செல்போனுக்கு வீடியோ அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் வந்து கொண்டே இருந்தது. இது பற்றி அவருடைய குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பெண் டாக்டரை மிரட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகளை வலை வீசி தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
