தமிழக அரசியலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு விவகாரம் தற்போது உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தமிழகம் வந்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை இறுதி செய்யவிருந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயலின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது, கூட்டணிக்குள் நிலவும் பெரும் புகைச்சலை உறுதிப்படுத்துகிறது. அதே சமயம், அதிமுகவின் பிடியைத் தளர்த்தும் நோக்கில் டிடிவி தினகரன் மற்றும் பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இன்று (மார்ச் 21) டெல்லிக்கு விரைந்து அமித் ஷாவைச் சந்திக்கச் சென்றிருப்பது, எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணியில் இணைந்தது முதலே எடப்பாடிக்கு மறைமுகக் குடைச்சல் கொடுத்து வரும் டிடிவி தினகரன், “தமிழகத்தில் பாஜகதான் கூட்டணிக்குத் தலைமை” என்று பகிரங்கமாக அறிவித்தது அதிமுகவின் ‘தலைமை’ என்ற அந்தஸ்துக்கே விடுக்கப்பட்ட சவாலாகப் பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் தனக்கிருக்கும் செல்வாக்கை அமித் ஷாவிடம் விளக்கி, தங்களுக்கு வேண்டிய தொகுதிகளை டெல்லி மூலம் நேரடியாக உறுதி செய்து கொள்ள தினகரன் திட்டமிட்டுள்ளார். இதே பாணியில் அன்புமணி ராமதாஸும் வட மாவட்ட வாக்கு வங்கியை முன்வைத்து காய்களை நகர்த்தி வருவதால், கூட்டணிக் கட்சிகளின் இந்தத் தன்னிச்சையான டெல்லி பயணம் எடப்பாடியை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.
பாஜகவின் அழுத்தத்தால் மட்டுமே தினகரனைத் தனது கூட்டணியில் சேர்க்கச் சம்மதித்த எடப்பாடி பழனிசாமிக்கு, இப்போது தனது தலைமைக்கே ஆபத்து வந்துள்ளதை ஜீரணிக்க முடியவில்லை எனத் தெரிகிறது. அதிமுகவின் ஆதிக்கத்தைச் சிறுமைப்படுத்தி, தங்களை முக்கியமான சக்தியாகக் காட்டிக்கொள்ளும் மற்ற கட்சிகளின் இந்த முயற்சியைத் தடுக்க எடப்பாடி தீவிரமாக ஆலோசித்து வருகிறார். குறிப்பாக, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி “தலைமையில் சமரசம் இல்லை” என்ற தீர்மானத்தை நிறைவேற்றி டெல்லிக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்ப அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒருவேளை டெல்லியின் அழுத்தம் கட்டுக்கடங்காத நிலைக்குச் சென்றால், எடப்பாடி பழனிசாமி தனது ‘பிளான் B’ (Plan B) அஸ்திரத்தைக் கையில் எடுக்கவும் வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதாவது, பாஜகவைத் தவிர்த்துவிட்டு மற்ற சிறிய கட்சிகளைத் தனது தலைமையில் ஒருங்கிணைத்து ஒரு வலுவான திராவிட அணியை முன்னிறுத்த அவர் தயங்கமாட்டார் என்கிறார்கள். “வின்னபிலிட்டி”கார்டை பயன்படுத்தி, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை விட்டுக்கொடுக்க முடியாது என அடம்பிடிப்பதன் மூலம் பாஜகவை இறங்கி வர வைக்க எடப்பாடி முயலலாம். இறுதிக்கட்டத் தொகுதிப் பங்கீட்டில் எடப்பாடி எடுக்கப்போகும் அந்த ‘அதிரடி’ முடிவுக்காகத் தமிழகமே காத்திருக்கிறது.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…