நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் தெரிவித்த கருத்துகள் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. “விஜய் முதலில் த்ரிஷாவை விட்டு வெளியே வரட்டும்” என அவர் விமர்சித்திருந்தது, தனிநபர் மீதான அவதூறாகவும் கண்ணியமற்ற பேச்சாகவும் பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் நயினார் நாகேந்திரனின் கருத்துகளுக்குத் திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் விடுத்துள்ள கண்டனத்தில், அரசியல் களத்தில் இருப்பவர்கள் பொதுவெளியில் பயணிக்கும் ஒரு பெண்ணைப் பற்றி அவதூறாகப் பேசுவது அழகல்ல என்று சுட்டிக்காட்டியுள்ளார். பெண்களைக் கண்ணியத்துடன் நடத்துவதும், நாகரிகமாகப் பேசுவதுமே உண்மையான அரசியல் பண்பாடு என்றும், பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் இத்தகைய மட்டமான விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் நயினார் நாகேந்திரனுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
