தமிழக அரசின் அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பயனாளிகளுக்கு நிதியுதவியுடன் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் சிறப்பம்சமாக, விண்ணப்பதாரர்களுக்கு எவ்வித வருமான உச்சவரம்போ அல்லது குறைந்தபட்ச கல்வித் தகுதியோ நிர்ணயிக்கப்படவில்லை. பொதுவான பயனாளிகளுக்கு 25,000 ரூபாயும், பட்டதாரிகளாக இருந்தால் 50,000 ரூபாயும் திருமண உதவியாக வழங்கப்படுகிறது.
இதுவரை இந்த உதவித்தொகையைப் பெற தகுதியுள்ள பெண்கள் அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பித்து வந்தனர். ஆனால், தற்போது விண்ணப்ப செயல்முறையை எளிதாக்கும் வகையில், பொதுமக்கள் இனி இ-சேவை (e-Seva) மையங்கள் மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இந்த டிஜிட்டல் முறை மாற்றம், பயனாளிகள் அலைச்சலின்றி விரைவாகப் பலன் பெற உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
