மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற மொஹரம் ஊர்வலத்தில், விஷம் கலந்த மாத்திரைகளைக் கொடுத்து மக்களைக் கொல்ல முயன்ற நபரின் சதியை போலீசார் முறியடித்துள்ளனர். இந்தத் திட்டத்திற்காக மொத்தம் 30,000 விஷ மாத்திரைகளைத் தயாரிக்க அவர் இலக்கு வைத்துச் செயல்பட்டுள்ளார். ஆனால், அந்த இலக்கை எட்டுவதற்கு முன்பாகவே அவர் போலீசாரிடம் சிக்கி உள்ளார்.
மும்பை டோங்ரி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த அந்த நபர், இந்தச் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார். மாத்திரைகளுக்கான வெற்று கேப்சியூல்களுக்குள் , ‘ஜின்க் பாஸ்பைடு’ எனப்படும் எலி விஷப் பவுடரை நிரப்பி அவர் இந்த விஷ மாத்திரைகளைத் தயாரித்துள்ளார். வழக்கமாக மொஹரம் ஊர்வலங்களின் போது, பங்கேற்பாளர்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதற்காகவோ அல்லது நேர்த்திக்கடனாகவோ உணவு, தண்ணீர் அல்லது மருந்துகள் வழங்கப்படும் வழக்கத்தை அவர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயன்றுள்ளார்.
இந்த விஷ மாத்திரைகள் ஊர்வலத்தில் விநியோகிக்கப்பட்ட நிலையில், அதில் பங்கேற்ற நபர் ஒருவருக்குத் திடீரென கடுமையான வயிற்று வலியும் வாந்தியும் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர் உடனடியாகப் போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, விடுதியில் மறைந்திருந்த அந்த நபரைக் கைது செய்து சதித்திட்டத்தை அம்பலப்படுத்தியுள்ளனர்.
