கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நீலம்பூர் அருகே நிகழ்ந்த ஒரு கொடூரச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவியை, அதே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் அவரது காதலன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளான். பள்ளிக்குச் சென்ற மாணவி மாலை வீடு திரும்பாததால் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், மாணவியின் காதலனே இந்தக் கொடூரத்தைச் செய்தது அம்பலமானது. காதலை முறித்துக் கொள்ளலாம் என்று மாணவி கூறியதால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று அவரை வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்துக் கொன்றதாகத் தெரிகிறது.
இந்தக் கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது, வனியம்பலம் ரயில் நிலையம் அருகிலுள்ள வனப்பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் சீருடையுடன் மாணவியின் சடலத்தைக் கண்டெடுத்தனர். இதையடுத்து மாணவியின் உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றத்தை ஒப்புக்கொண்ட 16 வயது மாணவனைக் கைது செய்த போலீசார், அவரைச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர். சிறு வயதிலேயே காதலின் பெயரால் நிகழ்ந்த இந்த வன்கொடுமை மற்றும் கொலைச் சம்பவம் கேரளா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
