பீகார் மாநிலம் மோதிஹாரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கேஸ் சிலிண்டர் பெறுவதற்காக முகமதியா மற்றும் பதாஹி பகுதிகளில் உள்ள கேஸ் ஏஜென்சிகளுக்கு வெளியே மக்கள் இரவு பகலாக காத்துக் கிடக்கின்றனர். வரிசையில் முந்துவதற்காக மக்கள் ஏஜென்சி வாசலிலேயே கொசுவலைகளைக் கட்டிக்கொண்டு தூங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சிலிண்டர் திருடுபோவதைத் தவிர்க்க, பொதுமக்கள் தங்களது காலி சிலிண்டர்களை இரும்புச் சங்கிலிகளால் பிணைத்து பூட்டுப் போட்டு வைத்துள்ளனர். மொபைல் போன்களுக்கு முன்பதிவு செய்ததற்கான OTP வந்தாலும், ஏஜென்சிக்குச் சென்றால் கையிருப்பில் கேஸ் இல்லை என்று கூறி திருப்பி அனுப்புவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் சமைக்க முடியாமல் பல குடும்பங்கள் பட்டினியாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி கேஸ் சிலிண்டர்கள் கறுப்புச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. சாதாரண ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அரசு நிர்ணயித்த விலையில் கேஸ் கிடைக்காமல் வீதிகளில் உறங்கும் நிலையில், கறுப்புச் சந்தை மாஃபியாக்கள் இதில் ஆதாயம் அடைந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு விநியோக முறையைச் சரிசெய்ய வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
