“ராம நவமி பிரசாதத்தில் விபரீதம்…” பெங்களூரு அருகே 60 பேருக்கு வாந்தி, மயக்கம்…. மருத்துவமனையில் குவிந்த பக்தர்கள்…!!

By Devi Ramu on பங்குனி 30, 2026

Spread the love

கர்நாடகா மாநிலம் பெங்களூரு கிராமப்புற மாவட்டத்தில் நடைபெற்ற ராம நவமி கொண்டாட்டத்தின் போது, பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தை உண்ட 400-க்கும் மேற்பட்டோரில் சுமார் 60 பேருக்குத் திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு தேவனஹள்ளியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட சுகாதார அதிகாரி லக்கா கிருஷ்ணா ரெட்டி தெரிவித்துள்ளார்.

உணவு நச்சானதா (Food Poisoning) அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பதைக் கண்டறிய, மூத்த சுகாதார அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீதமிருந்த பிரசாத மாதிரிகளைச் சேகரித்துள்ளனர். அவை தற்போது தடய அறிவியல் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆய்வக முடிவுகள் வந்த பின்னரே இந்த பாதிப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயில் பிரசாதம் உண்டு ஒரே நேரத்தில் இத்தனை பேர் பாதிக்கப்பட்டிருப்பது பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.