வட டெல்லியின் புராரி பகுதியில் உள்ள அஜித் விஹார் மைதானத்தில் சூட்கேஸ் ஒன்றில் அடைக்கப்பட்ட நிலையில் 17 வயது சிறுமியின் உடலை டெல்லி போலீசார் திங்கள்கிழமை இரவு மீட்டுள்ளனர். பீகாரைச் சேர்ந்த அந்தச் சிறுமி, தனது சொந்த ஊரில் உள்ள உறவினர் ஒருவரைக் காதலித்து வந்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினர், சிறுமியை டெல்லியில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட பின்னரும் சிறுமி காதலனுடன் போனில் பேசியதால் ஆத்திரமடைந்த அவரது அத்தை மகன் அவிநாஷ், முன்கூட்டியே ஒரு சூட்கேஸை வாங்கித் தனது நண்பனின் மெக்கானிக் கடையில் மறைத்து வைத்துள்ளார். ஆகஸ்ட் 16 அன்று சிறுமியை அந்தக்கடைக்கு அழைத்துச் சென்று கழுத்தை நெரித்துக் கொன்று, உடலைச் சூட்கேஸில் அடைத்து நள்ளிரவில் பைக் மூலம் எடுத்துச் சென்று பாழடைந்த நிலத்தில் வீசியுள்ளார். தகவல் அறிந்து விரைந்த போலீஸார் அவிநாஷைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
