திருநெல்வேலி மாவட்டம் உக்கிரமன்னன் கோட்டையை சேர்ந்தவர் மிலன்சிங். இவர் மாற்றுத்திறனாளி. இவர் ஏற்கனவே மூன்று பெண்களை திருமணம் செய்து அவர்களை பிரிந்து விட்டார். தற்போது 4-வதாக ஜீவிதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் நெல்லையைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுடன் மிலன் சிங்குக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே அந்த இளம்பெண் காணாமல் போனதால் அவரது பெற்றோர் குருவிகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கடந்த 2016-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் பாதி எரிந்த நிலையில் அந்த இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மிலன்சிங் ஆசை வார்த்தைகள் கூறி அந்த பெண்ணை வெண்ணம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ள வாடகை வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு பாலியல் தொந்தரவு அளித்து துன்புறுத்தி உள்ளார். அதனை பொறுக்க முடியாமல் இளம்பெண் தகராறு செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் கோபத்தில் மிலன்சிங் தனது நான்காவது மனைவி ஜீவிதா உடன் இணைந்து அந்த இளம் பெண்ணை அடித்து கொலை செய்து அவரது உடலை நெடுஞ்சாலை ஓரத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்தது. இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி மிலன் சிங் மற்றும் அவரது நான்காவது மனைவி ஜீவிதா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
