தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்காக ஒட்டுமொத்த மாநிலமும் காத்திருக்கும் வேளையில், தூத்துக்குடி மாவட்ட அரசியல் களம் பெரும் பரபரப்பை சந்தித்து வருகிறது. ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளரும், மாவட்ட பொதுச் செயலாளருமான பிச்சுவிளை சுதாகர், திடீரென அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தது கூட்டணி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தொகுதிப் பங்கீட்டின் போது இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நீடித்த நிலையில், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே நிகழ்ந்துள்ள இந்த கட்சித் தாவல், “கூட்டணிக்குள் விரிசல் தொடங்கிவிட்டதா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் மீண்டும் போட்டியிட்டுள்ள நிலையில், அவருக்கு திமுக தரப்பில் போதிய ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தேர்தலின் போதே முன்வைக்கப்பட்டது. குறிப்பாக, அமிர்தராஜ் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ. 62 லட்சம் சிக்கிய விவகாரத்தில், அவருக்கு நெருக்கமானவர்களே தகவலை கசியவிட்டதாக ஒரு பேச்சு நிலவுகிறது. தொகுதிப் பொறுப்பாளராக இருந்த சுதாகர், தேர்தல் பணிகளில் தொய்வு காட்டியதாகக் கூறி வேட்பாளர் தரப்பு அவரை ஒதுக்கி வைத்ததும், அதற்குப் போட்டியாக அவர் திமுகவில் ஐக்கியமானதும் உட்கட்சி மோதலை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராகக் கருதப்படும் பிச்சுவிளை சுதாகரின் இந்த மாற்றம், திட்டமிடப்பட்ட ஒரு நகர்வாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது. தேர்தல் பணிகளில் தங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என வேட்பாளர் அமிர்தராஜ் தலைமைக்கு புகார் அளித்த நிலையில், அதற்கு பதிலடியாகவே காங்கிரஸ் நிர்வாகியை திமுக பக்கம் அமைச்சர் இழுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இன்னும் சில காங்கிரஸ் முக்கியப் புள்ளிகளும் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாகத் தெரிவது, ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு, திமுகவினர் சரிவர களப்பணியாற்றவில்லை என்ற ஆதங்கம் மாநிலம் முழுவதும் பரவலாக ஒலித்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து வெற்றி தோல்விகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, ஒரு ஆளுங்கட்சி தனது கூட்டணிக் கட்சியின் முக்கிய நிர்வாகியைத் தன்வசப்படுத்துவது அரசியல் நாகரிகமா என்ற விவாதங்களும் எழுந்துள்ளன. இந்தச் சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்துடன் நின்றுவிடுமா அல்லது மாநில அளவில் திமுக – காங்கிரஸ் உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பின்பே தெரியவரும்.
சென்னையில் மாதவரம் 200 அடி சாலையில், மாதவரம் ரவுண்டானா முதல் கொளத்தூர் சந்திப்பு வரையிலான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்…
புதுக்கோட்டை மாவட்டம் திருநாளூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (26) என்பவர், தனது நண்பர்களாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள பரபரப்பான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எழுந்துள்ள 'உள்' விவகாரங்கள் தொடர்பாகத் தலைவர்…
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் (2026) திமுக தனது தேர்தல் அறிக்கையில் 'இல்லத்தரசி' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…
சார்ஜாவிலிருந்து சென்னை வந்த ஏர் அரேபியா விமானத்தில், பயணி ஒருவர் திடீரென அவசரகால கதவைத் திறந்து வெளியே குதித்து ஓடியதால்…