தெலுங்கானா மாநிலம் எல்கதுரத்தி அருகே உள்ள கோபாலூரை சேர்ந்த கிருபாகர் என்பவருடைய மகள் கீர்த்தனா (19) ஹைதராபாத்தில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி டெக் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். இதனிடையே கல்லூரியில் நடத்தும் பாடம் தனக்கு சரியாக புரியவில்லை என்று தினமும் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு குடும்பத்தினரிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். அவர்களும் தங்கள் மகளுக்கு சமாதானம் கூறி தைரியப்படுத்தினர். ஆனால் மாணவி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் அவரை விடுமுறையில் வீட்டுக்கு வரவழைத்து வேறு கல்லூரியில் சேர்க்கும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனிடையே வீட்டுக்கு வந்த கீர்த்தனா தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து உள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கீர்த்தனா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி பாடம் புரியாததால் மாணவியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
