புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்திய ராணுவ ‘அக்னிவீர்’ உடல்தகுதி தேர்வின் போது, ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற கல்லூரி மாணவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரின் மகன் கோகுல் (18). இவர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார். இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற லட்சியத்தோடு, புதுவையில் நடைபெற்று வரும் அக்னிவீர் உடல்தகுதி தேர்வில் கோகுல் ஆர்வமுடன் கலந்து கொண்டார்.
மைதானத்தில் நடைபெற்ற ஓட்டப்பந்தயப் பிரிவில் அவர் தீவிரமாக ஓடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகளும் ஊழியர்களும் அவரை உடனடியாக மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
