கோவையில் அடுத்த அதிர்ச்சி… அன்னூரில் நடுரோட்டில் நடந்த சைக்கோத்தனம்… திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடிக்கு நேர்ந்த பயங்கரம்…!

By Nanthini on வைகாசி 25, 2026

Spread the love

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் கட்டுக்குள் வரவில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், கோவையில் அண்மையில் 10 வயது சிறுமி பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. அந்த அதிர்ச்சி விலகுவதற்குள், கோவையில் மற்றொரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் இருந்து அன்னூர் நோக்கி நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் ஒரு காதல் ஜோடி சென்றுள்ளனர். இவர்களுக்கு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் ஆள் நடமாட்டமில்லாத, இருள் சூழ்ந்த சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, மதுபோதையில் இருந்த ஆசாமி ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் இவர்களைப் பின்தொடர்ந்துள்ளார். அந்த நபர் தனது வண்டியின் முகப்பு விளக்கு மற்றும் செல்போன் டார்ச் வெளிச்சத்தை மாற்றி மாற்றி எரியவிட்டு, சைக்கோத்தனமாக அவர்களை கீழே தள்ளிவிட முயன்று அச்சுறுத்தியுள்ளார். மேலும், தனது நண்பர்களை போன் செய்து சம்பவ இடத்திற்கு அழைத்ததால் பயந்துபோன அந்த ஜோடி, அவரிடமிருந்து தப்பிக்க வண்டியை வேகமாக ஓட்டிச் சென்று, வழியில் இருந்த ஒரு டீக்கடையில் தஞ்சம் புகுந்தது.

   

பின்தொடர்ந்து வந்த போதை ஆசாமியிடம் டீக்கடை உரிமையாளர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் ஏன் இப்படி வம்பிழுக்கிறாய் என்று கோபத்துடன் கேள்வி எழுப்பினர். அதற்கு அந்த நபர் மதுபோதையில் தள்ளாடியபடியே, “நான் தவெக கட்சியைச் சேர்ந்தவன். பெண்களின் பாதுகாப்பிற்காகத்தான் இவர்களைப் பின்தொடர்ந்து வந்தேன். எங்கள் தலைவர் (விஜய்) தான் பாதுகாப்பு கொடுக்கச் சொன்னார்” என்று உளறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காதல் ஜோடி, “எங்களைப் பின்தொடர நீ யார்?” என்று கேட்டு, அந்த நபர் பேசியதை தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தனர். பொதுமக்கள் திரண்டதை அடுத்து, பயந்துபோன அந்த ஆசாமி தனது பைக்கை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

   

இந்த மிரட்டல் சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட காதல் ஜோடி அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. அதன் பேரில், வீடியோ ஆதாரங்களை கைக்கொண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், காதல் ஜோடியை மிரட்டிய அந்த நபர் தாசம்பாளையத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பது தெரியவந்துள்ளது. அவரை விரைவில் கைது செய்வோம் என்று காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.