தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் பணியாற்றும் 179 தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் இன்று (பிப்.12) வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சியின் 30 வார்டுகளில் பணிபுரியும் நிரந்தர மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட இந்த உணவில், குறிப்பாக 5-வது வார்டு பகுதியில் விநியோகிக்கப்பட்ட பொங்கலில் கரப்பான் பூச்சி இருந்ததைக் கண்டு பணியாளர்கள் நிலைகுலைந்து போயினர். பொதுமக்களின் சுகாதாரத்தைப் பேணும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவிலேயே இத்தகைய அலட்சியம் காட்டப்பட்டது பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்தச் சுகாதாரச் சீர்கேடு குறித்து அதிர்ச்சியடைந்த தூய்மைப் பணியாளர்கள், உடனடியாக நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டு காரசாரமான கேள்விகளை எழுப்பினர். முதல்வரின் விரிவுபடுத்தப்பட்ட உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட உணவு ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் தரமான மற்றும் சுகாதாரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது.
