“அவரே 9:30-க்கு வர்றாரே”… முதல்வர் விஜய்யின் டைம் மேனேஜ்மென்ட்.. ஊழியர்களுக்கு செக்…. கோட்டையில் பறந்த அதிரடி உத்தரவு…!

By Nanthini on வைகாசி 20, 2026

Spread the love

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் நிர்வாக ரீதியாகப் பல்வேறு அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, அரசு நிர்வாகத்தில் முக்கிய அதிகாரிகளின் இடமாற்றம் தொடங்கி, ஒவ்வொரு துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவது வரை புதிய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் காலை 10 மணிக்குள் தங்களது அலுவலகத்திற்கு வந்து, உடனடியாகப் பணியைத் தொடங்க வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி அறிவிப்பு தலைமைச் செயலக ஊழியர்களிடையே தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைமைச் செயலகத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட துறைகளில் சுமார் 5,500-க்கும் அதிகமான அரசு மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான அதிகாரப்பூர்வ பணி நேரம் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை ஆகும். எனினும், பல ஊழியர்கள் நீண்ட காலமாகவே காலதாமதமாக அலுவலகத்திற்கு வருவதாகவும், இதனால் அரசுப் பணிகள் தொய்வடைந்து ஒட்டுமொத்த நிர்வாகமும் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்து வந்தன. ஒரு ஊழியரின் தாமதம் ஒட்டுமொத்த துறையின் கோப்பு நகர்வுகளையும் முடக்குவதால், இந்த நீண்ட காலப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க புதிய அரசு தற்போது முடிவு செய்துள்ளது.

   

இதற்குத் தீர்வாக, முதலமைச்சர் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி தலைமைச் செயலக அதிகாரிகளுக்கு முக்கிய வாய்மொழி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஊழியர்கள் அனைவரும் காலை 10 மணிக்கு முன்பாகவே அலுவலகத்திற்கு வந்து, வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு, சரியாக 10 மணிக்குத் தங்களது இருக்கையில் அமர்ந்து பணியைத் தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் அவர்களே பெரும்பாலும் காலை 9:30 மணி முதல் 10 மணிக்குள் தலைமைச் செயலகத்திற்கு வந்து பணியைத் தொடங்கிவிடுவதால், அரசு ஊழியர்களும் அதே போன்றதொரு பணி ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே அரசின் முதன்மை எதிர்பார்ப்பாக உள்ளது.

   

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து பேருந்து, ரயில் மற்றும் சொந்த வாகனங்களில் வரும் ஊழியர்கள், தங்களது பயண முன்கூட்டியே திட்டமிட்டு நேரத்தோடு வர வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, ஊழியர்களின் வருகையைக் கண்காணிக்க பயோமெட்ரிக் முறையைக் கொண்டு வர மனிதவள மேலாண்மைத் துறை முயன்றபோது, ஊழியர் சங்கங்களின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டு பழைய பதிவேட்டு முறையே தொடர்கிறது. இந்நிலையில், வரும் நாட்களில் தலைமைச் செயலாளர் மற்றும் துறைச் செயலாளர்கள் ஊழியர்களின் வருகை நேரத்தை நேரடியாகக் கண்காணிப்பார்கள் என்றும், விதிகளை மீறுவோர் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.