தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆட்சிக்கால முறைகேடுகள் குறித்த அறிக்கைகள் மற்றும் ஆதாரங்கள் தமது மேஜையில் இருப்பதாக முதலமைச்சர் விஜய் சமீபத்தில் தெரிவித்திருந்த கருத்து பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சியினர் ஆதாரம் கோரிய நிலையில், தகுந்த நேரத்தில் அவை மக்கள் மன்றத்தில் வெளியிடப்படும் என்றும், தற்போதைக்கு இடைத்தேர்தல் நிலவரங்களை உற்றுநோக்கி அமைதி காப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நகர்வு, வெறும் அரசியல் பேச்சாக இல்லாமல், வரவிருக்கும் இடைத்தேர்தலை மையமாகக் கொண்டு திட்டமிடப்பட்ட ஒரு வியூகமாகவே பார்க்கப்படுகிறது.
தற்போது காலியாக உள்ள 7 தொகுதிகளில் 5 தொகுதிகளுக்கான தேர்தல் வழக்குகளின் இடைக்காலத் தடை நிறைவடையும் தருவாயில் உள்ளதால், மிக விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 107 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெறாத தமிழக வெற்றி கழகம் (தவெக), பிற தோழமைக் கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சியை அமைத்துள்ளது. எனவே, இந்த 7 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது தவெகவின் ஆட்சி ஸ்திரத்தன்மைக்கு மிகவும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.
கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் தவெக அரசின் செயல்பாடுகளுக்குத் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருவதால், எந்த நேரத்திலும் அரசியல் சூழல் மாறக்கூடும் என்ற பதற்றம் நிலவுகிறது. இந்த இடைத்தேர்தலில் தவெக அதிக இடங்களைக் கைப்பற்றினால் சட்டமன்றத்தில் அதன் பலம் 114 ஆக உயரும். இதன் மூலம் தோழமைக் கட்சிகளின் தயவை பெருமளவு குறைத்துக் கொண்டு, 5 ஆண்டு கால ஆட்சியை எவ்வித அச்சுறுத்தலுமின்றி பாதுகாப்பாகத் தொடர முடியும் என அக்கட்சியின் தலைமை கணக்கு போடுகிறது.
பொதுவாக இடைத்தேர்தல்கள் ஆளும்கட்சிக்குச் சாதகமாக அமைவது வழக்கம் என்றாலும், இம்முறை முழுமையான வெற்றியைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் விஜய் அரசுக்கு உள்ளது. தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன், எதிர்க்கட்சிகள் மீதான ஊழல் ஃபைல்களைப் பொதுவெளியில் வெளியிட்டு, அவர்களின் பிம்பத்தைச் சரித்து, தவெகவின் செல்வாக்கை மேலும் உயர்த்தும் அரசியல் காய்களை முதலமைச்சர் விஜய் நகர்த்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
