“என் பொண்ணையே காதலிக்கிறியா?”… இளைஞரை நடுரோட்டில் துடிதுடிக்கக் கொன்ற தவெக நிர்வாகி… பரிதாபமாகப் பறிபோன உயிர்…!!

By Gayathri on ஆவணி 23, 2026

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரவீனும், அதே ஊரைச் சேர்ந்த அரசியல் கட்சி நிர்வாகியான ஏழுமலை என்பவரின் மகளும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்குப் பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று பிரவீனை வழிமறித்த பெண்ணின் சித்தப்பா மணிகண்டன், காதலைக் கைவிடுமாறு மிரட்டியுள்ளார். அதற்குப் பிரவீன் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது அண்ணன் ஏழுமலை, அவரது மகன் மற்றும் நண்பர் ஒருவரை உடனடியாக அந்த இடத்திற்கு வரவழைத்துள்ளார்.

அங்கு வந்த நால்வரும் சேர்ந்து பிரவீனைச் சரமாரியாகத் தாக்கியதோடு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய அந்த இளைஞரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த பிரவீன், பலத்த காயங்கள் காரணமாக நான்கு நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

   

இச்சம்பவம் குறித்து உயிரிழந்த இளைஞரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், கேளம்பாக்கம் காவல் துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிரமாகச் செயல்பட்டனர். அதன் விளைவாக, கொலையில் நேரடியாக ஈடுபட்ட ஏழுமலை, அவரது தம்பி மணிகண்டன், மகன் கௌதம் மற்றும் அவனது நண்பர் நித்திஷ் ஆகிய நான்கு பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இது திட்டமிட்ட ஆணவக் கொலையாக இருக்கலாம் எனப் பிரவீனின் உறவினர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், காவல் துறையினர் அனைத்துக் கோணங்களிலும் தங்கள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.