தமிழக சட்டமன்றத்தில் இன்று உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர் விஜய், தனது துறையின் கீழ் 59 முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ்நாடு காவல் துறையை வலுப்படுத்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், சட்டம் ஒழுங்கை சீரமைத்தல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை எனப் பல துறைகளில் விரிவான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு இந்த அறிவிப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
காவல் துறையின் ஆட்குறைப்பைக் குறைக்கும் வகையில், மாநிலத்திலுள்ள காவல் நிலையங்களில் அடுத்த 5 ஆண்டுகளில் 29,108 கூடுதல் காவலர் பணியிடங்கள் படிப்படியாக உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். நடப்பாண்டிலேயே 5,000 பெண் காவலர்கள் உட்பட மொத்தம் 10,000 காவலர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். மேலும், போதைப் பொருள் பயன்பாட்டை வெற்றிகரமாக ஒழிக்கும் 50 கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, கிராமம் ஒன்றுக்கு 10 இலட்சம் ரூபாய் வீதம் பரிசுத்தொகை வழங்கப்படும். லஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் முயற்சியாக, காவல் நிலையங்களுக்கான எதிர்பாராத செலவின நிதி உயர்த்தி வழங்கப்படவுள்ளது.
நவீனத் தொழில்நுட்பங்களை உள்ளடக்கி 212 கோடி ரூபாய் செலவில் காவல் துறை நவீனமயமாக்கப்படும். இதில் செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தடயவியல், நிகழ்நேர கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் நவீன கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். குற்றவியல் ஆய்வுகளை விரைவுபடுத்த சேலம் மற்றும் விழுப்புரம் வட்டார தடய அறிவியல் ஆய்வகங்களில் 14 கோடி ரூபாய் செலவில் புதிய மரபணு பரிசோதனை மையங்கள் (DNA Testing Facility) நிறுவப்படும். மேலும், ஆவடி ஆணையரகத்தில் புதிதாக பூந்தமல்லி காவல் மாவட்டமும், தாம்பரம் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக கிளாம்பாக்கம் காவல் மாவட்டமும் உருவாக்கப்படும்.
பணியின்போது உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை 1 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், பணிக்காலத்தில் இயற்கை எய்தும் காவலர்களின் குடும்ப கருணைத் தொகை 20 இலட்சத்திலிருந்து 30 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்காக 6 புதிய நிலையங்கள், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பயிற்சிக் கழக உள்கட்டமைப்புகள் மற்றும் 80 கோடி ரூபாய் செலவில் 131 புதிய குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இவற்றுடன் காவல் துறையின் செயல்திறனை உயர்த்த 200 கோடி ரூபாய் செலவில் புதிய வாகனங்கள் வாங்கப்படுவதும், கோவை, சேலம், நீலகிரி போன்ற மாவட்டங்களில் புதிய காவல் நிலையக் கட்டடங்கள் கட்டப்படுவதும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.
