பல்லாவரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வியும் மருத்துவமும் தான் நமது திமுக அரசின் இரு கண்களாக உள்ளன. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கான, கல்விக் கொள்கையை நேற்று வெளியிட்டேன். காலுக்கு கீழ் சிறிது நிலமும், தலைக்கு மேல் கூரையும் இன்னும் பலருக்கு கனவாகவே உள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை புறநகர் பகுதியில் மக்களுக்கான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மனிதனின் அடிப்படையான தேவை உடை, உணவு. இவை எளிதில் கிடைத்தாலும் தங்குவதற்கான இடம் கிடைப்பதில்லை. பட்டா வழங்குவதில் தனி கவனம் செலுத்தி வரும் நிலையில், 5 மாதங்களில் 5 லட்சம் பேருக்கு பட்டா வழங்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்த இலக்கை தாண்டி 7 லட்சத்துக்கும் அதிகமான பட்டாக்கள் வழங்கப்பட்டன.
கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 17.74 லட்சம் பேருக்கு ரூ. 1,672 கோடி மதிப்பில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கியுள்ளோம். கலைஞர் ஆட்சிக்குப் பின் தற்போது இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளோம். வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத எடப்பாடி பழனிச்சாமி, அடிப்படை தெரியாத அறிவிலி போல், மத்திய அரசின் புள்ளி விவரத்தை தவறு என்கிறார். மத்திய அரசு செய்ய முடியாத நல்திட்டங்களை, மு.க.ஸ்டாலின் செய்கிறார் என்ற வயிற்றெரிச்சலில் பேசுகிறார். இந்தியாவே தமிழ்நாட்டை திரும்பிப் பார்த்து, இதுதான் வளர்ச்சி என்று சொல்வது போல் செயல்படுவோம். ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை உணவு, உடை ,இருப்பிடம் தான் என்பதை கருத்தில் கொண்டு, இத்திட்டம் செயல்பட்டு வருகிறது என்று பேசிவிட்டு, பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
