CINEMA
எம்.ஜி.ஆர் சுடப்படுவார் என்று முன்பே எச்சரித்த தயாரிப்பாளர்? கொஞ்சம் உஷாரா இருந்திருந்தா அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்குமா?
எம்.ஜி.ஆர் மக்களின் மனதில் இப்போதும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருப்பவர். “புரட்சித் தலைவர்”, “பொன்மனச் செம்மல்” போன்ற பட்டங்களுக்குச் சொந்தக்காரரான இவர் தன்னிடம் உதவி என்று நாடி வருபவர்களுக்கு கொடை வள்ளலாக திகழ்ந்தவர். இந்த நிலையில் 1967 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி எம்.ஜி.ஆரை சந்திக்கச் சென்ற நடிகவேள் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை இரண்டு முறை தனது துப்பாக்கியால் சுட்டார்.
எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டதில் எம்.ஜி.ஆரின் கழுத்தில் இரண்டு குண்டுகளும் பாய்ந்தன. அதன் பின் எம்.ஆர்.ராதா தன்னை தானே சுட்டுக்கொண்டார். ஆனால் இருவரின் உயிருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. மருத்துவமனையில் இருவருமே சிகிச்சை பெற்று மீண்டு வந்தார்கள். இதில் எம்.ஆர்.ராதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.
இந்த நிலையில் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசிய பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், இது குறித்த அரிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது “எம்.ஆர்.ராதா உங்களை துப்பாக்கியால் சுடப்போவதாக கூறிக்கொண்டு திரிகிறார். நீங்கள் எதற்கும் கவனமாக இருக்க வேண்டும்” என்று எம்.ஜி.ஆரை அவரது நண்பரும் தயாரிப்பாளருமான சின்னப்பா தேவர் முன்னமே எச்சரித்திருந்தாராம்.
எனினும் எம்.ஜி.ஆர் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த பிறகு ஒரு முறை எம்.ஜி.ஆரும் சின்னப்பா தேவரும் சந்தித்துக்கொண்டார்களாம். அப்போது சின்னப்பா தேவர், “அன்றைக்கே நான் உங்களை எச்சரித்தேன். நீங்கள்தான் குரைக்கிற நாய் கடிக்காது என்று சொன்னீர்கள். உங்களை இப்படி ஒரு ஆபத்து சூழந்திருப்பதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையே” என்று அனுதாபப்பட்டாராம்.
அதற்கு எம்.ஜி.ஆர், “இது குரைக்கவே இல்லையேண்ணே நேரடியா என்னைய கடிச்சிடுச்சு. ஏதோ வீரியம் இழந்த குண்டுங்குறதுனால இப்போ உங்ககிட்ட உயிரோட நின்னு பேசிட்டு இருக்கேன். இல்லைன்னா அன்னைக்கே போய் சேர்ந்திருப்பேன். அதை நினைச்சு சந்தோஷப்படுங்க” என்று கூறினாராம்.