ஜெயலலிதா பாணியில் ஒரு வேட்டை…!! லஞ்ச வீடியோவால் சிக்கிய தவெக கருப்பு ஆடு… உளவுத்துறை ரிப்போர்ட் வந்ததும் நள்ளிரவில் பறந்த உத்தரவு…!!

By Devi Ramu on ஆடி 16, 2026

Spread the love

மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீராசாமி என்பவர், ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தமிழக முதலமைச்சர் விஜய், உளவுத்துறை அதிகாரிகள் மூலம் புகாரின் உண்மைத்தன்மையை உறுதி செய்துகொண்டார். அதன் பின்னர், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்த அந்த ஊராட்சித் தலைவரை, எவ்வித இழுபறியுமின்றி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார். முதலமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கை, தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா அளித்த நேர்காணலில், இந்த விவகாரத்தைப் பண்டைக்கால பங்காரு லட்சுமணன் லஞ்ச விவகாரத்துடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். மற்ற அரசியல் கட்சிகளைப் போலக் கடமைக்குக் தற்காலிக நீக்கம் செய்யாமல், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாணியில் மிகக் கடுமையான முடிவை விஜய் எடுத்துள்ளதாகப் பாராட்டியுள்ளார். மேலும், மக்கள் இந்த ஆட்சியில் முதலமைச்சரின் பிம்பத்தை மட்டுமே நம்பி வாக்களித்துள்ளதால், அவரைச் சுற்றியுள்ள இரண்டாம் கட்டத் தலைவர்களின் முறைகேடுகளை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அதிரடி நீக்கம் தவறு செய்ய நினைக்கும் மற்ற அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.