மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், ‘பிரிகாபாலின்’ (Pregabalin) மருந்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் பொருட்டு, அதை 1945-ம் ஆண்டு மருந்து விதிகளின் ‘அட்டவணை எச்1’-ன் (Schedule H1) கீழ் கொண்டுவந்து கட்டுப்பாடு விதித்துள்ளது. நாள்பட்ட வலி, நரம்புச் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் ஃபைப்ரோமியால்ஜிய போன்ற தீவிர சிகிச்சைகளுக்குப் பரிந்துரைக்கப்படும் இந்த மருந்து, அதன் மயக்கமூட்டும் தன்மைக்காக இளைஞர்களிடையே தவறாகப் பயன்படுத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. நாட்டின் சில பகுதிகளில் இது சட்டவிரோதமாகக் கையிருப்பு வைக்கப்பட்டு, அங்கீகாரமின்றி விற்கப்பட்டதைத் தொடர்ந்து, மே 20, 2026 அன்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அதிரடி மாற்றத்தின் மூலம், பிரிகாபாலின் மருந்தின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இனிமேல் பதிவுசெய்யப்பட்ட தகுதிவாய்ந்த மருத்துவப் பயிற்சியாளரின் செல்லத்தக்கப் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல் இந்த மருந்தை எந்தவொரு மருந்தகத்திலும் விற்பனை செய்யக் கூடாது. மேலும், மருத்துவ ஆலோசனையின்றி இந்த மருந்தை மக்கள் நேரடியாகப் பயன்படுத்துவது முற்றிலும் ஆபத்தானது என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
புதிய விதிமுறைகளின்படி, சில்லறை மருந்து விற்பனையாளர்கள் பிரிகாபாலின் மருந்தின் பரிந்துரைச் சீட்டுகள் மற்றும் அதன் விற்பனை விவரங்களைத் துல்லியமாகப் பதிவு செய்ய ஒரு தனிப் பதிவேட்டைப் (Register) பராமரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த மருந்தைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது மருந்துப் பாக்கெட்டுகளின் மீது “அட்டவணை எச்1 மருந்து எச்சரிக்கை” லேபிளைத் தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும். உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் மருந்தாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இந்த கடுமையான விதிமுறைகளை உடனடியாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
