புதுக்கோட்டை மாவட்டம் ரெங்கம்மாள் சத்திரத்திலிருந்து அரசு நகரப் பேருந்தில் பள்ளிக்குச் செல்ல ஏறிய 11 பழங்குடியின மாணவிகளை, பேருந்து நடத்துநர் நடுவழியில் கீழே தள்ளிவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தங்கள் குடும்பத்திலேயே முதல் தலைமுறையாக கல்வி கற்கச் செல்லும் இந்த மாணவிகள், பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதற்காகவே பேருந்திலிருந்த சிலர் கூறியதைக் கேட்டு நடத்துநர் இந்த அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி மாணவிகளை இறங்குமாறு நடத்துநர் வற்புறுத்தியுள்ளார். அவர்கள் இறங்க மறுத்த நிலையில், மெதுவாகச் சென்று கொண்டிருந்த பேருந்தின் கதவைத் திறந்து ஒரு மாணவியை நடத்துநர் பலவந்தமாகத் தள்ளிவிட்டுள்ளார். இதனால், பேருந்தின் படிக்கட்டு அருகில் நின்று கொண்டிருந்த 11 மாணவிகளும் அடுத்தடுத்து கீழே விழுந்துள்ளனர். இதில் 8 மாணவிகளுக்கு தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர்கள் தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த மாணவிகள் கண்ணீருடன் கதறியதைக் கண்டு, அப்பகுதியிலிருந்த சமூக ஆர்வலர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவிகள் கீழே விழுந்த தருணத்தில் பின்னால் மற்றொரு வாகனம் வந்துகொண்டிருந்ததாகவும், நல்வாய்ப்பாகப் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மாணவிகள் மீதான இந்தத் தீண்டாமை மற்றும் வன்முறைச் செயல், அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துநர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும் புதுக்கோட்டை – திருச்சி நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கல்வி பயிலச் செல்லும் எளிய பின்னணி கொண்ட மாணவிகளுக்கு நேர்ந்த இந்த அநீதிக்கு அரசு உடனடியாக உரிய நீதி வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
