தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஆகியோருக்கு, தூத்துக்குடியைச் சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் பண்ணையார் என்பவர் 1 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தான் அந்தக் கட்சியில் இணைந்ததாகத் தவறான தகவலைப் பரப்பியதற்காக இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள மாவடிபண்ணையைச் சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் பண்ணையார், விவசாயம், செங்கல் சூளை உள்ளிட்ட பல்வேறு தொழில்களைச் செய்து வருகிறார். இவரது மகன் நிவாஸ் என்பவர் கடந்த வாரம் தவெக மாவட்டச் செயலாளர் பிரைட்டர் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். அப்போது, கண்ணன் பண்ணையாரும் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்துவிட்டதாக மாவட்டச் செயலாளர் பிரைட்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணன் பண்ணையார், தான் எந்தக் கட்சியிலும் சேராமல் சுயேச்சையாகத் தொழில் செய்து வருவதாகவும், இத்தகைய பொய் தகவலால் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சுமார் 1000 குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் தனது தொழிலுக்கு இச்சம்பவம் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக நடிகர் விஜய் மற்றும் மாவட்டச் செயலாளர் பிரைட்டர் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்குத் தொடர இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில் தவெக தலைவருக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த நோட்டீஸ் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
