சென்னையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த தனது எதிர்பார்ப்புகளைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார். மேடையில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அருகிலேயே அமர்ந்திருந்த அவர், நீண்ட நேரம் முதல்வருடன் ஆலோசனையில் ஈடுபட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய செல்வப்பெருந்தகை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மக்களுக்காகக் கேட்டதையும், கேட்காததையும் அள்ளி அள்ளிக் கொடுக்கும் வள்ளலாகத் திகழ்வதாகப் புகழ்ந்து பேசினார். அதே வேளையில், “எதை கேட்டாலும் கொடுக்கும் நீங்கள் தான் அடுத்த முறையும் முதல்வராக வருவீர்கள். அப்போதும் நாங்கள் கேட்டதை எல்லாம் நீங்கள் கொடுக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டது, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கும் கூடுதல் தொகுதிகளை நோக்கியே அமைந்திருந்ததாகக் கருதப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், காங்கிரஸ் கட்சி கடந்த காலங்களைக் காட்டிலும் அதிக இடங்களைப் பெறவும், ஆட்சியில் பங்கு வகிக்கவும் விரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபகாலமாக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் திமுக கூட்டணியைத் தாண்டி மற்ற கட்சிகளுடன் இணக்கமாகப் பேசி வருவது கூட்டணியில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழலில், செல்வப்பெருந்தகையின் இந்தப் பேச்சு கட்சித் தொண்டர்களிடையே முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
எப்படியாவது இந்த வலுவான கூட்டணியைப் பிரிக்க வேண்டும் என்று சிலர் நினைப்பதாகவும், ஆனால் அது ஒருபோதும் நடக்காது என்றும் செல்வப்பெருந்தகை தனது பேச்சில் உறுதியாகத் தெரிவித்தார். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இரட்டை குழல் துப்பாக்கி போலச் செயல்பட்டு நாட்டுக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்ததைப் போல, தமிழகத்தின் உரிமைகளைக் காக்க இந்தக் கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை மேடையிலேயே உறுதிப்படுத்தினார்.
