பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்த 20 வயது இளம்பெண், பஞ்சாப் மாநிலத்தில் சொந்தக் குடும்பத்தினராலேயே கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட ஆணவக்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபின் ஃபரித்கோட் மாவட்டம் கோட்கபுரா அருகே அமிர்தசரஸ்-பட்டிண்டா தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள வயல்வெளியில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் மஹாக்பிரீத் கவுர் என்பதும், இவர் தனது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக கடந்த மே 4-ஆம் தேதி ஒரே கிராமத்தைச் சேர்ந்த ஜகதீப் சிங் என்பவரைக் காதல் திருமணம் செய்துகொண்டதும் தெரியவந்தது.
திருமணத்திற்குப் பிறகு பதிண்டா மாவட்டத்தில் வசித்து வந்த இந்தத் தம்பதியினர், கடந்த திங்கள்கிழமை மாலை கோட்கபுராவை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, பெண்ணின் குடும்பத்தினர் அவர்களை வழிமறித்துள்ளனர். அப்போது, கூர்மையான ஆயுதங்களால் மஹாக்பிரீத்தை கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்துள்ளனர்; இதிலிருந்து கணவர் ஜகதீப் சிங் அதிர்ஷ்டவசமாகத் தப்பிச் சென்றுள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தடயவியல் ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர். இக்கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய மஹாக்பிரீத்தின் குடும்பத்தினரைக் கைது செய்யத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
