தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான மகேந்திரன் என்பவர் கடந்த ஜூலை 6-ஆம் தேதி மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சேந்தமரம் போலீசார் செல்போன் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்தபோது, அவர் மாயமாகும் முன் இரண்டு சிறுவர்களுடன் பேசியது தெரியவந்தது. அந்த சிறுவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், ஓரினச்சேர்க்கை தொடர்பான தகராறில் மகேந்திரனைக் கொலை செய்து, உடலின் எடையை அதிகரிக்க கல்லைக் கட்டி கடையநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கிணற்றில் வீசியதையும், தலையைத் துண்டித்து குற்றாலம் கலைவாணர் அரங்கம் பின்புறம் புதைத்து வைத்ததையும் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, தென்காசி தாசில்தார் முன்னிலையில் புதைக்கப்பட்ட தலையைத் தோண்டி எடுத்த போலீசார், கிணற்றிலிருந்த உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய 3 சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தப்பியோடிய மற்றொரு நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஓரினச்சேர்க்கை தகராறில் இளைஞர் தலை துண்டிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
