மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள புடவைக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவாத் புராவைச் சேர்ந்த இவருக்கும், இஷான் கான் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதல் தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில், இஷான் வேறு ஒரு பெண்ணுடன் பழகியதாலும், சிறுமியின் வீட்டில் வேறு இடத்தில் திருமண ஏற்பாடுகள் செய்ததாலும், அச்சிறுமி இஷானிடமிருந்து படிப்படியாக விலகத் தொடங்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இஷான், தனது உறவினர் அர்பாஸ் கானுடன் சேர்ந்து சிறுமியை கொல்லத் திட்டம் தீட்டியுள்ளார். நண்பரின் பலேனோ காரை இரவல் வாங்கிய இவர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய சிறுமியை வலுக்கட்டாயமாகக் காரில் கடத்திச் சென்றுள்ளனர். கேன்சர் ஹில்ஸ் மலைப்பகுதிக்குக் காரைக் கொண்டு சென்று, தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்குச் சிறுமி திட்டவட்டமாக மறுக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அர்பாஸ் சிறுமியின் கைகளைப் பிடித்துக் கொள்ள, இஷான் தனது காதலியின் துப்பட்டாவாலேயே அவரது கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் உடலைப் புதரில் வீசிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகள் மற்றும் காரின் பதிவு எண்ணை வைத்துத் தீவிர விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக இஷான் கான் மற்றும் அர்பாஸ் கான் ஆகிய இருவரையும் போலீசார் 12 மணி நேரத்திற்குள் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
