விருதாச்சலத்தை சேர்ந்த முருகவேல் (33 )ஆட்டோ டிரைவராக உள்ளார். இவருக்கு இரு மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் முகேஷ் (7) அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 2ஆம் வகுப்பு படிக்கிறார். இளைய மகன் ரோகித் விருதாச்சலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வருகிறார். தினந்தோறும் முருகவேல் ரோகித்தை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
அதேபோல் நேற்று கும்பபந்தம் கிராம சாலையில் சென்ற போது திடீரென நாய் ஒன்று குறுக்கே சென்றது. நாய் மீது மோதாமல் இருக்க தனது ஆட்டோவை திருப்ப முயன்ற சமயத்தில், அவருடைய ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மண் மேட்டின் மீது ஏறி கவிழ்ந்து விட்டது. இச்சம்பவத்தில் ரோகித்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சில காயங்களுடன் தப்பிய முருகவேல் அவ்வழியாகச் சென்றவர்களின் உதவியுடன், ரோகித்தை மீட்டு, சிகிச்சைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் ரோகித் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் .இதனைக் கேட்ட முருகவேல், மனம் உடைந்து கதறி அழுதார். இத்துயரச் சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
