அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து அளித்த அதிரடிப் பேட்டி, தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்குப் பிறகு, அமமுகவிலிருந்து சில நிர்வாகிகள் விலகியதைத் தொடர்ந்து, கட்சி நிலைகுலைந்துவிட்டதாக எழுந்த விமர்சனங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சொந்த காரணங்களுக்காக விலகியவர்கள், கட்சியை கூண்டோடு கலைத்துவிட்டதாகக் கூறுவது அப்பட்டமான பொய் என்றும், அவர்களுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு கட்சி சுறுசுறுப்புடன் இயங்கி வருவதாகவும் தினகரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அதிமுக – அமமுக இணைப்பு குறித்த ஊகங்களுக்கும் இந்த பேட்டியின் மூலம் மிகத் தெளிவான முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில், கடந்த தேர்தலில் தங்களுக்குள் இருந்த மனவருத்தங்களை மறந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து செயல்பட்டதாகக் குறிப்பிட்ட தினகரன், கூட்டணி தர்மத்தின்படி இப்போதும் பாஜக மற்றும் அதிமுகவிற்கு உறுதுணையாக இருப்பதாகக் கூறினார். எனினும், இரு கட்சிகளும் இணைய இதுதான் சரியான நேரம் என்று வெளியில் பலரும் பேசினாலும், கட்சியின் தனித்துவத்தை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்றும், அமமுக என்றென்றும் தனித்துவமான இயக்கமாகவே செயல்படும் என்றும் தன் அரசியல் சுயமரியாதையை நிலைநிறுத்தியுள்ளார்.
அதேவேளையில், தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசை தினகரன் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். விவசாயக் கடன் தள்ளுபடி, 200 யூனிட் இலவச மின்சாரம் போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து தவெக மக்களை ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், சமூக ஊடகங்களில் ‘ரீல்ஸ்’ போட்டு தற்போதைய ஆட்சியாளர்கள் காலத்தைக் கடத்துவதாகவும், இதனால் மக்கள் இதனை “இன்ஸ்டா அரசன் 24-ம் புலிகேசி ஆட்சி” என்று விமர்சிப்பதாகவும் சாடினார். தவெக அரசு புதிய ஆட்சியாகத் தெரியவில்லை என்றும், இது திமுக அரசின் நீட்சியாகவே இருப்பதாகவும், திராவிட கட்சிகளுக்கு மாற்று என நினைத்து மக்கள் ஒரு பேராபத்தைக் கொண்டு வந்துவிட்டதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
மறுபுறம், தினகரனின் இந்த ஆக்ரோஷமான அரசியல் நகர்வுகளுக்குப் பின்னால் இருக்கும் பின்னடைவுகளையும், பாஜகவின் போக்கையும் அரசியல் விமர்சகர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். அமமுக சார்பில் மன்னார்குடியில் வென்ற ஒரேயொரு எம்.எல்.ஏ-வான காமராஜும் ஆளுங்கட்சியான தவெக-விற்குத் தாவியதால் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்தச் சூழலில், தவெக அரசு மீது குதிரை பேரக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி ஆளுநரிடமும், காவல்துறையிடமும் தினகரன் ஆதாரங்களைச் சமர்ப்பித்தார். இந்த விவகாரத்தை சிபிஐ இயக்குநரிடம் கொண்டு செல்ல அவர் திட்டமிட்டிருந்த போதும், அதற்கு டெல்லி பாஜாக தரப்பிலிருந்து எவ்வித அரசியல் ஆதரவோ அல்லது ஒத்துழைப்போ கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மத்திய அரசும், ஆளுநரும் தினகரனின் புகார்கள் மீது காட்டும் மெத்தனம், தமிழக அரசியல் களத்தில் பாஜக அவரைத் திட்டமிட்டே கைகழுவி வருகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஒருபக்கம் டெல்லியின் ஆதரவு கிடைக்காமலும், மறுபக்கம் தமிழகத்தில் போதிய பலம் இல்லாமலும் அமமுக தனித்துவிடப்பட்டுள்ள சூழல் உருவாகியுள்ளது. இத்தகைய இக்கட்டான நிலையிலும், தவெக அரசை “பேராபத்து” என்று தினகரன் மிகத் தீவிரமாகத் தாக்கிப் பேசி வருவது, அவர் இனி பாஜகவின் தயவை எதிர்பாராமல், தன் சொந்த பலத்தை மட்டுமே நம்பி முட்டி மோத வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார் என்பதையே காட்டுவதாக அரசியல் திறனாய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நடிகர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு த்ரிஷா அவருக்கு வாழ்த்து தெரிவிக்காததும், அவரை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துவிட்டதாக எழுந்த வதந்திகளும்…
சீனாவின் சிச்சுவான் மாகாணத் தெருக்களில் மனிதனைப் போன்ற தோற்றம் கொண்ட 'ஹியூமனாய்டு' ரோபோ ஒன்று மண்டியிட்டு, கைகளைக் கூப்பி பிச்சை…
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய் "டாஸ்மாக் கட்சி நிதி" எனக் குறிப்பிட்டதாகக் கூறி திமுக…
தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை வழங்கி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.…
சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, தங்களைப் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்று கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அதன்…
பசிபிக் பெருங்கடலில் கடல் மட்டமும், வெப்பநிலையும் மிக வேகமாக உயர்ந்து வருவதை நாசாவின் 'Sentinel-6' செயற்கைக்கோள் கண்டறிந்துள்ளது. இது 'சூப்பர்…