மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் பாஜக எம்.எல்.ஏ பிரிதம் லோதியின் மகன் தினேஷ் லோதி, தனது மஹிந்திரா தார் வாகனத்தால் ஐந்து பேர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவபுரியின் கரேரா பகுதியில் கடந்த வியாழக்கிழமை காலை, எம்.எல்.ஏ-வின் மகன் ஓட்டிச் சென்ற தார் வாகனம் அதிவேகமாக வந்து முதலில் ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற மூன்று பேர் தூக்கி வீசப்பட்ட நிலையில், அந்த வாகனம் நிற்காமல் முன்னால் நடந்து சென்ற இரண்டு பெண்கள் மீதும் மோதியது. இந்த விபத்தில் ஐந்து பேரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய தினேஷ் லோதி, காயமடைந்தவர்களுக்கு உதவாமல் அவர்களிடமே வாக்குவாதத்தில் ஈடுபட்டது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், எம்.எல்.ஏ-வின் மகன் அங்கிருந்த காவலர்களிடமும் பொதுமக்களிடமும் ஆக்ரோஷமாகப் பேசுவது பதிவாகியுள்ளது. “நான் சைரன் ஒலித்துக் கொண்டேதான் வந்தேன், நீங்கள் ஏன் விலகவில்லை?” என்று காயமடைந்தவர்களையே அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அந்தப் பகுதி தன்னுடையது என்பது போன்ற தொனியில், “கரேரா என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா?” (Karera Tere Daddy Ka Hai?) என்று அங்கிருந்த காவலரை நோக்கி அவர் ஒருமையில் பேசியது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக தினேஷ் லோதி மீது அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மகனின் செயல் குறித்துப் பேசிய எம்.எல்.ஏ பிரிதம் லோதி, “சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்; பொதுமக்களின் நலனே எனக்கு முக்கியம், எனது குடும்பம் அல்ல” என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வின் மகன் என்பதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
