தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக் கொடுத்த ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பாக்யராஜ், இந்திய அளவிலேயே திரைக்கதை மன்னன் என்ற பெயரைப் பெற்றவர். புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் மூலம் அவரை நடிகராக அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா.
பல படங்களை இயக்கி அப்போது பீக்கில் இருந்த பாக்யராஜ் 1982 ஆம் ஆண்டு நடிப்பு மற்றும் இயக்கத்தில் நான்கு படங்கள் ரிலீஸாகி நான்குமே சூப்பர்ஹிட் ஆனது. அதன் மூலம் அவர் ஒரு முன்னணி கதாநாயக நடிகனானார். அதன் பிறகு பெரும்பாலும் அவர் ஹீரோவாக நடிக்கவே முன்னுரிமை கொடுத்தார். 80 களில் முன்னணி நடிகராக இருந்த அவர் 90 களில் தனது மார்க்கெட்டை இழக்க ஆரம்பித்தார்.
அதன்பிறகு சொக்கத்தங்கம் மற்றும் பாரிஜாதம் என இயக்குனராக மட்டும் கவனம் செலுத்தினார். ஆனால் அந்த படங்கள் பெரியளவில் ஓடாததால் அவரால் இயக்குனராக அதன் பின்னர் தொடர முடியவில்லை. அதன் பின்னர் குணச்சித்திர நடிகராக இப்போது கலக்கி வருகிறார்.

இந்நிலையில் பாக்யராஜ் சில வருடங்களுக்கு முன்னர் அளித்த நேர்காணல் ஒன்றில் எப்படி பாரதிராஜா தன்னை புதிய வார்ப்புகள் படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார் என்பது குறித்து பேசியுள்ளார். அதில் “புதிய வார்ப்புகள் படத்தில் நான் ஹீரோவாக நடிக்கப் போகிறேன் என்பது எனக்குத் தெரியாது. முதலில் நான் திரைக்கதையில் வேலை செய்யதான் போனேன்.
பின்னர் என்னையே திரைக்கதைக்கு வசனம் எழுத சொன்னார். ஷூட்டிங் தொடங்க சில நாட்கள் இருக்கும் போது ‘ஹீரோ யாரும் அமையல. நீதான் ஹீரோ என்றார்’. என்னை அதற்காகத் தயார் படுத்தினார். அதற்கு அப்புறம்தான் எனக்குத் தெரிந்தது. நான் கிழக்கே போகும் ரயில் படத்தில் சுதாகருக்கு வசனம் சொல்லிக் கொடுப்பதை எல்லாம் அவர் கவனித்திருக்கிறார் என்று. அதைப் பார்த்துதான் அவருக்கு என் மேல் நம்பிக்கை வந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.
