தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர் இயக்கிய வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக உள்ளன. அவர் இயக்கிய அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தன.
இடையில் பாலு மகேந்திரா இயக்கிய சில படங்கள் வணிக ரீதியாக சரியாக போகவில்லை. அதனால் அவர் பொருளாதார நெருக்கடியில் இருந்துள்ளார். அப்போது அவருடன் பணியாற்றிய கமலஹாசன் மற்றும் சில்க் ஸ்மிதா போன்றவர்கள் அவருக்கு பொருளாதார ரீதியாக உதவிகளை செய்துள்ளனர்.
90 களின் இறுதியில் பாலு மகேந்திரா கிட்டத்தட்ட திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பை இழந்தார். அதனால் தொலைக்காட்சியில் கதை நேரம் என்ற பெயரில் பிரபல எழுத்தாளர்களின் கதைகளை சினிமாவாக எடுத்துள்ளார். அதன் பின்னர் அவர் சில படங்களை இயக்கினாலும் அவை பெரியளவில் கவனம் பெறவில்லை. அதன்பின்னர் அவரின் உதவி இயக்குனர்கள் அடுத்தடுத்து படங்களை இயக்கி அவருக்கு பெருமை சேர்த்தனர்.

ஒரு கட்டத்தில் பாலு மகேந்திரா பிறருடைய படங்களுக்கு தான் ஒளிப்பதிவு செய்வதில்லை என்ற முடிவை எடுத்தார். ஏனென்றால் மணிரத்னம் மற்றும் மகேந்திரன் போன்றோரின் முதல் படங்களுக்கு பாலு மகேந்திராதான் ஒளிப்பதிவு செய்தார். ஆனால் அவர்களுக்கு இயக்கம் தெரியாது என்றும் அந்த படங்களை பாலு மகேந்திராதான் இயக்கினார் என்றும் வதந்திகள் பரவின.
அதனால் அந்த முடிவை எடுத்த பாலு மகேந்திரா பல ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் ராம் சொன்ன கற்றது தமிழ் கதை பிடித்துப் போய் அதற்கு ஒளிப்பதிவு செய்ய சம்மதித்துள்ளார். ஆனால் அது கைகூடாமல் போகவே கடைசியில் எஸ் ஆர் கதிர் அந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார்.
