தமிழ் சினிமாவில் தன்னுடைய கதைகளில் ரௌத்திரத்தை ஏற்றி பார்வையாளர்களை திகைத்துப் போக வைக்கும் படங்களை எடுத்தவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கிய சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்கள் அவற்றின் உருவாக்கத்தால் இன்றளவும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கின்றன. என்னதான் ரௌத்திரமாக இருந்தாலும் அவர் கதைகளின் அடிநாதமாக இருப்பது அன்புதான்.
அவர் படங்களில் நடித்த பின்னர்தான் விக்ரம், சூர்யா மற்றும் ஆர்யா ஆகியோர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தனர். அதனால் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பல இளம் ஹீரோக்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர் படங்களில் கதாநாயகர்கள் பெரிய அளவுக்கு உயர்ந்தாலும், கதாநாயகிகள் போன இடம் தெரியாமல் காணாமல் போனார்கள்.
இயக்குனர் பாலாவுக்கு சமீபகாலமாக திரைவாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. அவர் இயக்கிய தாரை தப்பட்டை படம் அட்டர் ப்ளாப் ஆனது. வர்மா படம் அவர் இயக்கியது பிடிக்கவில்லை என்று மீண்டும் வேறொரு இயக்குனரால் இயக்கப்பட்டது. அதே போல சூர்யாவை வைத்து அவர் முதலில் இயக்கிய வணங்கான் படத்தில் இருந்து வெளியேறினார். இதையடுத்து அருண் விஜய்யை வைத்து அவர் வணங்கான் படத்தை ரிலீஸ் செய்துள்ளார். அந்த படம் சுமாரான வெற்றியைப் பெற்றுள்ளது.
ஊரில் தான்தோன்றியாய் சுற்றிக் கொண்டிருந்த தன்னை ஒரு மனிதனாக, ஒரு இயக்குனராக உருவாக்கியவர் தன்னுடைய குருநாதர் பாலு மகேந்திராதான் என பாலா பலமுறைக் கூறியுள்ளார். இந்நிலையில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் தான் எப்படி பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக வேலைக்கு சேர்ந்தேன் என்பதைப் பகிர்ந்துள்ளார்.

அதில் “அறிவுமதி அண்னன் அப்போது பாலு மகேந்திராவிடம் இணை இயக்குனராக பணியாற்றினார். அவர்தான் என்னை அழைத்துக் கொண்டு வீடு பட ஷூட்டிங்குக்கு சென்றார். அங்கே வேலைப் பார்க்க சொன்னார். ஆனால் நான் வேலைப் பார்ப்பது பாலு மகேந்திரா சாருக்கே தெரியாது. இப்படி அந்த படம் முழுவதும் நான் வேலைப் பார்த்தேன். டப்பிங்கின் போது திடீரென என்னைப் பார்த்த பாலு மகேந்திரா சார் “யார் நீ” என்பது போல பார்த்தார்.” எனக் கூறியுள்ளார்.
