சாதனைகள் செய்வதற்கு வயது என்றுமே தடையில்லை என்பதற்கு நம் கண்முன் இருக்கும் உதாரணம் இளையராஜா அவர்கள். 27 வயதில் தனக்கு இசைக் குறிப்புகள் எழுதக் கூட தெரியாத நிலையில் இருந்து இன்று இசையை எழுதும் ஒரு சில இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். தன்னுடைய 82 ஆவது வயதில் இப்போது முதல் சிம்ஃபொனியை அரங்கேற்றியுள்ளார்.
இன்றைக்கு உலகில் இருக்கும் இசையமைப்பாளர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இருக்கிறார் இளையராஜா. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர இசைக் கச்சேரிகளை உலகம் முழுவதும் நடத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
இளையராஜா தன்னுடைய திரை வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். பல ஜாம்பவான்களோடு இணைந்து பணியாற்றியுள்ளார். ஆனால் அவர் திரை வாழ்க்கையில் ஒரேயொரு குறையாக இருப்பது அவர் எம் ஜி ஆரோடு இணைந்து பணியாற்றவில்லை. இளையராஜா தமிழ் சினிமாவுக்கு 1976 ஆம் ஆண்டே அறிமுகம் ஆகிவிட்டார். எம் ஜி ஆர் 1977 ஆம் ஆண்டு சினிமாவை விட்டு அரசியலுக்கு சென்றுவிட்டார்.

ஆனால் இளையராஜா இசையில் எம் ஜி ஆர் ஒரு படத்தில் நடிக்க இருந்தார் என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கும். எம் ஜி ஆர் முதலமைச்சர் ஆன பின்னர் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்பட்டுள்ளார். அதற்காக இசையமைப்பாளராக இளையராஜாவை ஒப்பந்தம் செய்து ஒரு பாடலைக் கம்போஸும் செய்துள்ளனர். அந்த பாடலை இளையராஜாவே பாடியும் இருந்தார். ஆனால் அந்த படம் கைவிடப்பட்டதால் அந்த பாடல் வெளிவராமலே போனது. அதனால் நம்மால் இளையராஜா எம் ஜி ஆர் கூட்டணியை தமிழ் சினிமா உலகம் காண முடியாமல் போனது.
