தமிழ் சினிமாவில் தன்னுடைய கதைகளில் ரௌத்திரத்தை ஏற்றி பார்வையாளர்களை திகைத்துப் போக வைக்கும் படங்களை எடுத்தவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கிய சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்கள் அவற்றின் உருவாக்கத்தால் இன்றளவும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கின்றன.
அவர் படங்களில் நடித்த பின்னர்தான் விக்ரம், சூர்யா மற்றும் ஆர்யா ஆகியோர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தனர். அதனால் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பல இளம் ஹீரோக்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர் படங்களில் கதாநாயகர்கள் பெரிய அளவுக்கு உயர்ந்தாலும், கதாநாயகிகள் போன இடம் தெரியாமல் காணாமல் போனார்கள்.
இயக்குனர் பாலாவுக்கு சமீபகாலமாக திரைவாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. அவர் இயக்கிய தாரை தப்பட்டை படம் அட்டர் ப்ளாப் ஆனது. வர்மா படம் அவர் இயக்கியது பிடிக்கவில்லை என்று மீண்டும் வேறொரு இயக்குனரால் இயக்கப்பட்டது. அதே போல சூர்யாவை வைத்து அவர் முதலில் இயக்கிய வணங்கான் படத்தில் இருந்து வெளியேறினார். இதையடுத்து அருண் விஜய்யை வைத்து அவர் வணங்கான் படத்தை ரிலீஸ் செய்துள்ளார்.
இதற்கிடையில் பாலாவின் சேது திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவருக்கு திரையுலகினர் ஒரு பாராட்டு விழா நடத்தினர். அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் மிஷ்கின் “இயக்குனர் பாலா பற்றி நான் கேட்ட கதை இது. ராஜீவ் மேனன் சார் ஒரு நாள் லேப்புக்கு ஏதோ வேலையாக சென்றுள்ளார். அப்போது 30 செருப்புகளுக்கு நடுவே ஒல்லியாக ஒரு இளைஞர் படுத்துத் தூங்கியுள்ளார்.
யார் இது எனக் கேட்டுள்ளார். ஒரு படத்தின் இயக்குனர் என சொல்லியுள்ளனர். என்னப்பா ஒரு இயக்குனரை இப்படி செருப்புக்கு நடுவே படுக்க் விட்டிருக்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார். அப்படி செருப்புக்கு நடுவே படுத்து ‘சேது’ என்ற காவியத்தைக் கொடுத்தவன் பாலா. அது ஒரு படைப்பாளனின் அயர்ச்சி. கடவுள் உலகத்தைப் படைத்த பின்னர் அடையும் அயர்ச்சிக்கு நிகரானது” எனக் கூறியுள்ளார்.