சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்ட சையது இப்கிதார் அன்த்ராபி என்பவர், தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வில் விசாரணைக்கு வந்தது. போதைப்பொருள் பயங்கரவாத வழக்கில் கடந்த 5 வருடங்களாகச் சிறையில் இருக்கும் இவரது மனுவை விசாரித்த நீதிபதிகள், பயங்கரவாத தடுப்புச் சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தாலும் “ஜாமீன் என்பது தான் பொதுவான விதி, சிறை என்பது விதிவிலக்கு” என்ற முக்கிய கருத்தை அதிரடியாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், நாட்டின் குடிமக்களுக்கான சுதந்திர உரிமை என்பது வெறும் வெற்று முழக்கம் கிடையாது என்றும், அது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மிக முக்கிய விதி என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். வழக்கு விசாரணையில் ஏற்படும் தேவையற்ற காலதாமதம், சிறையில் இருக்கும் ஒருவருக்கு ஜாமீன் பெற்று விடுதலையாகும் உரிமையை இயல்பாகவே வழங்குகிறது என்று நஜீப் வழக்கின் தீர்ப்பை முன்னுதாரணமாகக் காட்டி அவர்கள் விளக்கமளித்தனர்.
இதேவேளையில், டெல்லி கலவர வழக்கில் சிறையிலுள்ள உமர் காலித் மற்றும் சர்ஜில் இமாம் ஆகியோர் ஓராண்டுக்கு ஜாமீன் கோர முடியாது என உச்சநீதிமன்றத்தின் மற்றொரு இரு நீதிபதிகள் அமர்வு முன்பு அளித்திருந்த தீர்ப்பை இந்த அமர்வு கடுமையாக விமர்சித்துள்ளது. உபா (UAPA) வழக்குகளிலும் தகுந்த காரணங்களின் அடிப்படையில் ஜாமீன் வழங்கலாம் என்று முந்தைய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளதால், அனைத்து இரு நீதிபதிகள் அமர்வும் அந்த விதிகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
