தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து நடப்பு கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் திறக்கப்படும் தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன்படி, 4 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. அதே சமயம், தொடக்கப்பள்ளிச் சிறுவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான பிஞ்சு குழந்தைகளுக்கு சற்று தாமதமாக ஜூன் 4-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் மற்றும் குடிநீர் தொட்டிகளைத் தூய்மைப்படுத்தும் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ளுமாறு கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளி திறக்கும் முதல் நாளன்றே மாணவர்களுக்குத் தேவையான விலையில்லாப் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
