நடிகை பேபி அஞ்சு மகேந்திரன் இயக்கத்தில் உருவான உதிரிப்பூக்கள் திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து கேளடி கண்மணி, அரங்கேற்ற வேளை, ஆதித்யன், கோபாலா கோபாலா, பூமகள் ஊர்வலம், உனக்காக எல்லாம் உனக்காக, பொல்லாதவன் உள்ளிட்ட படங்களில் பேபி அஞ்சு நடித்துள்ளார். தன்னைவிட முப்பது வயது மூத்த நடிகரான டைகர் பிரபாகரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தனது மகனுடன் வசித்து வருகிறார்.

இப்போது சினிமாவில் அஞ்சு நடிக்கவில்லை. சின்னத்திரை சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் youtube சேனலுக்கு பேபி அஞ்சு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தேன். கேளடி கண்மணி படத்தில் நடிக்க வசந்த் சார் தான் என்னை வீட்டிற்கு வந்து அழைத்தார். நான் நடிக்கவே மாட்டேன் என கூறினேன். ஆனால் எப்படியோ சமாளித்து என்னை சம்மதிக்க வைத்து விட்டார். முதல் காட்சியை நானும் எஸ்பிபி சாரும் இணைந்து நடித்தோம். ரொம்ப பயமா இருந்துச்சு.

அப்போ ராதிகா மேடம் தான் இப்படி நடிக்கணும் அப்படின்னு சொல்லி கொடுத்தாங்க. வசந்த் சார் அந்த சீன் சரியா வரலைன்னா ரொம்ப கோபப்படுவாரு. அப்போ நான் என் அம்மாகிட்ட அவங்க திட்றதெல்லாம் எனக்கு புதுசா இருக்கு. நீங்க அட்வான்ஸ் பணத்தை திரும்ப கொடுத்துருங்க நான் நடிக்கவே மாட்டேன்னு சொல்லிட்டேன். அதுக்கப்புறம் ஒரு வழியா என்னை கன்வின்ஸ் பண்ணி நடிக்க வச்சாங்க. அந்த சீன் நல்லா வந்ததும் வசந்த் சார் என்ன கூப்பிட்டு, பாரு இதுக்காக தான் நான் உன்னை திட்டினேன் என கூறினார். அலைகள் ஓய்வதில்லை படத்தில் நான் நடித்த போது நிறைய அட்ராசிட்டி பண்ணியிருக்கேன்.

சின்ன பிள்ளையா இருக்கும்போது பாரதிராஜா சார் இருக்கும்போது நடிக்கவே மாட்டேன்னு சொல்லி இருக்கேன். அவர் இருந்தா நடிக்க மாட்டேன்னு நான் அடம் பிடிச்சதா மணிவண்ணன் சார் ஒரு தடவை சொன்னாரு. அந்த தாடிக்காரரா இங்கிருந்து போ சொல்லுங்க. அவர் போனால் தான் நான் நடிப்பேன்னு சொல்லி அடம் பிடிச்சிருக்கேன். நானே இந்த சீன் எடுக்கிறேன் நீங்க போய் ஒளிஞ்சுக்கோங்க அப்படின்னு மணிவண்ணன் சொல்லி இருக்கிறார். பாரதிராஜா சாரும் ஒரு பாறைக்கு பின்னாடி போய் ஒளிஞ்சிருக்காரு. பாரதிராஜாவை பயமுறுத்தின ஒரே குழந்தை இவதான் மணிவண்ணன் சார் சொல்லுவாரு என பேபி அஞ்சு கூறியுள்ளார்.

