தமிழ் சினிமாவில் 60 கள் மற்றும் 70 களில் மினிமம் கியாரண்டி நடிகராக இருந்தவர் ஏவிஎம் ராஜன். புதுக்கோட்டையை பூர்விகமாக கொண்ட அவரின் இயற்பெயர் சண்முகசுந்தரம். இவரது பெற்றோர் அவரை போலீஸாக்க வேண்டுமென்ற ஆசையில் சென்னையில் பரீட்சை எழுத அனுப்பியுள்ளனர். ஆனால் அந்த தேர்வில் அவர் தேர்ச்சி பெறவில்லை. அதன் பிறகு சென்னை ஆளுநர் மாளிகையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
ஆனால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வாய்ப்புகளை தேடி அலைந்துள்ளார். அப்போதுதான் இயக்குனர் கே.சங்கர் இயக்கத்தில் 1959ல் சிவகங்கை சீமை படத்தில் நடித்தார். ஆனால் படம் எடிட் செய்யப்பட்ட போது அவர் நடித்தக் காட்சிகளைக் கட் செய்துள்ளனர்.
அவருக்கு ஆயிரங்காலத்துப் பயிர் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து நானும் ஒரு பெண் படத்தில் நடித்தார். ஏவிஎம் தயாரித்த அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் 1967ல் வெளியான கற்பூரம் திரைப்படம்தான். இந்த படத்துக்காக சிறந்த நடிகருக்கான மாநில விருது கிடைத்தது.

#image_title
இப்படி பல படங்களில் நடித்த அவர் கடைசியாக வீரன் வேலுத்தம்பி என்ற படத்தில் ஒரு வேடத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவர் 40 ஆண்டுகளாக இதுவரை ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. ஏனென்றால் அவர் இந்து மதத்தில் இருந்து மதம் மாறி கிறிஸ்துவ மதத்துக்கு மாறி பாதிரியானார். அதன் பின்னர் அவர் மதப் பிரச்சாரப் பணிகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார்.
அதனால் அவர் சினிமாப் பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை. அதுபற்றி பேசிய அவர் “பழைய ஏவிஎம் ராஜன் எப்பொதோ இறந்துவிட்டான். இப்போது இருப்பவன் கடவுளின் பிள்ளை. கடவுளை நேரில் பார்த்தவன்” எனப் பதிலளித்துள்ளார்.