தூத்துக்குடி டூ மதுரை.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இறுகும் அமலாக்கத்துறை பிடி… கேஸில் அதிரடி திருப்பம்….!

By Nanthini on பங்குனி 13, 2026

Spread the love

தமிழக மீன்பிடித் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், அமலாக்கத்துறை புதிய சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது. கடந்த 2001-2006 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட இந்த வழக்கு, தற்போது தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை மதுரைக்கு மாற்றக்கோரி அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (PMLA) பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க மதுரை நீதிமன்றத்திற்கே அதிகாரம் உள்ளதாகக் கூறி, அமலாக்கத்துறை தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. ஆனால், அந்த மனுவை தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது உயர் நீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடியுள்ளது. இது சட்டப்படி தவறான செயல் என அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் வாதிடுகிறார்.

   

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிக்காரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு, இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும், நான்கு வாரங்களுக்குள் இதற்குப் பதிலளிக்குமாறும் கெடு விதித்துள்ளது.

   

வழக்கு மதுரைக்கு மாற்றப்பட்டால், அது அமைச்சர் தரப்பிற்கு கூடுதல் சிக்கல்களை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, நான்கு வாரங்களுக்குப் பிறகு அமைச்சர் தரப்பு தாக்கல் செய்யப்போகும் பதில் மனு மற்றும் நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.