மும்பையில் கனமழை காரணமாக ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரஹன்மும்பை மாநகராட்சி ஆணையர் அஸ்வினி பிடே நகரின் நிலைமையைக் கூர்ந்து கண்காணித்து வருகிறார். மாநகராட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மைக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து, மும்பை முழுவதும் பொருத்தப்பட்டுள்ள 10,000-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் நகரின் முக்கியப் பகுதிகள் மற்றும் போக்குவரத்துச் சூழலை அவர் நேரடியாக ஆய்வு செய்தார்.
தாழ்வான பகுதிகள், முக்கியச் சந்திப்புகள் மற்றும் கடுமையான வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் இடங்களில் தேங்கியுள்ள மழைநீரின் அளவை இந்தக் கேமராக்கள் மூலம் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். நீர் தேங்கும் இடங்களில் தடையின்றி தண்ணீரை வெளியேற்ற ராட்சத பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனவா என்பதையும், மீட்புக் குழுவினரின் செயல்பாடுகளையும் இந்த டிஜிட்டல் கண்காணிப்பு மூலம் அஸ்வினி பிடே உறுதி செய்தார்.
மழை தீவிரமடைந்துள்ளதால், பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்குமாறும், மாநகராட்சி மற்றும் வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எவ்வித அவசரச் சூழலையும் எதிர்கொள்ளத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும், துரித மீட்புப் பணிகளும் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
