தமிழ்நாடு அரசியலில் எப்போதும் இல்லாத ஒரு புதிய திருப்பமாக, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்பாசமுத்திரம் தொகுதியில் எதிர்க்கட்சிகளின் ‘பொது வேட்பாளராக’ களம் இறங்கக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதுவரை எந்தவொரு தேர்தலிலும் கூட்டணி வைக்காமல் தனித்து மட்டுமே போட்டியிடுவோம் என்ற கொள்கை முழக்கத்தோடு பயணித்த சீமானின் இந்த புதிய நகர்வு, அவரது அரசியல் எதிரிகளாலும் ஆதரவாளர்களாலும் உற்றுநோக்கப்படுகிறது.
இந்த இடைத்தேர்தல் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒரு மிக முக்கியமான சவாலாகும். திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்ற முதலமைச்சர் விஜய் தனது பதவியை ராஜினாமா செய்ததாலும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததாலும் இந்த 6 தொகுதிகள் காலியாகின. தற்போதைய சூழலில் சட்டமன்றத்தில் தவெகவிற்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், இந்த இடைத்தேர்தல் முடிவுகள் அக்கட்சியின் ஆட்சித் நிலைத்தன்மைக்கு மிக முக்கியமானது. இதனால், தவெகவின் வெற்றியைத் தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் கைகோர்க்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
திரைமறைவில் பேசப்பட்டு வரும் இந்த புதிய வியூகத்தின்படி, எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் வாக்குகளைப் பிரித்துக் கொள்ளாமல் ஆளுங்கட்சியைத் தனிமைப்படுத்த திட்டமிட்டுள்ளன. இதற்காக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் தங்களுக்குள் தொகுதிகளைப் பகிர்ந்துகொண்டு, குறிப்பிட்ட தொகுதிகளில் வலுவான வேட்பாளர்களை நிறுத்த ஆலோசித்து வருகின்றன. அந்த வகையில், தாராபுரம், பெருந்துறை, விராலிமலை ஆகிய தொகுதிகளில் அதிமுகவும், திருச்சி கிழக்கு மற்றும் மதுராந்தகத்தில் திமுகவும் போட்டியிடலாம் எனத் தெரிகிறது. அதேநேரம், அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானை பொது வேட்பாளராக நிறுத்தினால் அதற்கு ஆதரவளிக்க திமுக சம்மதம் தெரிவித்துள்ளதாக வரும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளன.
“திராவிடக் கட்சிகளை ஒழிப்பதே எங்கள் முதல் வேலை” என்று மேடைகள்தோறும் முழங்கி, தமிழ்நாட்டு அரசியலில் மாற்று சக்தியாகத் தன்னை முன்னிறுத்திய சீமான், இப்போது அதே திராவிடக் கட்சிகளின் மறைமுக ஆதரவை ஏற்பாரா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. சட்டமன்றத்திற்குள் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்ற நோக்கத்திற்காக, தனது நீண்டகால அரசியல் கொள்கையான ‘தனித்துப் போட்டி’ என்பதை சீமான் கைவிடுகிறாரா என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. கோட்டையைப் பிடிப்பதற்காக கொள்கைகளை சமரசம் செய்து கொள்வது நாம் தமிழர் கட்சியின் தனித்துவமான அடையாளத்தையே சிதைத்துவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மறுபுறம், இந்த விவகாரத்தை தமிழக வெற்றிக் கழகத்தினர் சீமானுக்கு எதிரான ஒரு பெரிய ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். கொள்கை விசயத்தில் தவெக தலைவர் விஜய் எடுத்த நடுநிலையான நிலைப்பாட்டை, “நடுவில் நின்றால் லாரியில் அடிபட்டுத்தான் சாக வேண்டும்” என சீமான் முன்பு கடுமையாகச் சாடியிருந்தார். தற்போதைய சூழலைச் சுட்டிக்காட்டும் தவெகவினர், “அன்று விஜயை விமர்சித்த சீமான், இன்று திராவிடக் கட்சிகளின் ஆதரவோடு சட்டமன்றம் செல்ல முயல்வது என்ன மாதிரியான கொள்கை?” என்று கேள்வி எழுப்பி சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர்.
இருப்பினும், எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டு வியூகம் தங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தாது, மாறாக சாதகமாகவே முடியும் என்று முதலமைச்சர் விஜய் தரப்பு நம்புகிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்களுக்கு எதிராக ஒன்றிணையும் போது, “நாங்கள் தனியாக நின்று அனைவரையும் எதிர்க்கும் அளவிற்கு வலுவடைந்துவிட்டோம்” என்ற பிம்பத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என தவெக கருதுகிறது. மேலும், அனைத்துக் கட்சிகளும் ஒரு புதிய ஆட்சிக்கு எதிராகத் திரள்வது பொதுமக்களிடையே தவெக மீது ஒரு அனுதாப அலையை உருவாக்கி, இடைத்தேர்தலில் தங்களுக்குப் பெரும் லாபத்தைத் தரும் என்றும் அவர்கள் கணக்குப்போடுகிறார்கள்.
தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் நடத்தப்பட்ட ரூ.35 கோடி குதிரை…
தமிழக அரசியல் களம் எப்போதும் திமுக, அதிமுக என்ற இரு துருவங்களை மையமாகக்கொண்டே சுழன்று வந்துள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,…
நாக்பூரைச் சேர்ந்த ராஜேந்திர தெம்ரே என்ற ஆட்டோ ஓட்டுநர், தமக்குத் தற்செயலாகக் கிடைத்த கூடுதல் பணத்தைக் கொண்டு செய்த நற்செயல்…
சளி, இருமல், செரிமானக் கோளாறு போன்ற அன்றாட உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடியாக மருந்துக்கடைகளுக்கும் மருத்துவமனைக்கும் ஓடுவதைத் தவிர்த்து, நம் வீட்டு…
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் இளையராஜாவுக்கு கொலை மிரட்டல்…
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள…