தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் நடிகர்களில் ஒருவராக தளபதி படத்தின் மூலமாக அறிமுகமானவர் அரவிந்த் சுவாமி. அதன் பின்னர் ரோஜா என்ற திரைப்படம் அவரை இந்தியா முழுவதும் அறிந்த நடிகராக்கியது. அதன் பின்னர் பம்பாய் படம் அவரை சாக்லேட் பாய் கதாநாயகனாக்கியது. கமல்ஹாசனுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் அழகிய கதாநாயகனார்.
அதைத் தொடர்ந்து மறுபடியும், பம்பாய், இந்திரா, மின்சாரக்கனவு, என் சுவாச காற்றே போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற அரவிந்த்சுவாமி 2000 களின் ஆரம்ப கட்டத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அந்த காலத்தில் அவர் தன்னுடைய பிஸ்னஸில் கவனம் செலுத்தி மிகப்பெரிய தொழில்முனைவோராக வளர்ந்தார்.
சில ஆண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்ட 2012 ஆம் ஆண்டு கடல் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கம்பேக் கொடுத்தார். இப்போது தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வருகிறார். நவரசா ஆந்தாலஜியில் ஒரு படத்தை அவர் இயக்கியுமுள்ளார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தான் நடித்த சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தை மீண்டும் தெலுங்கில் நடித்தபோது அது நல்ல அனுபவமாக இல்லை எனக் கூறியுள்ளார். இதற்குக் காரணமாக “நான் முதலில் அந்த கதாபாத்திரத்தை நடித்தபோது அதில் நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைத்த்தன. ஆனால் அதையே திருப்பி நடிக்கும்போது அவர்கள் நான் தமிழில் என்ன செய்தேனோ, அதை அப்படியே திரும்ப செய்ய சொன்னார்கள். அது எனக்கு திருப்தியாக இல்லை” எனக் கூறியுள்ளார்.
தமிழில் தனி ஒருவன் திரைப்படத்தின் இமாலய வெற்றிக்கு அரவிந்த் சுவாமியின் மிடுக்கான நடிப்பும் ஒரு காரணமாக அமைந்தது. அதனால் அந்த படம் தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் ரீமேக் ஆன போது அவரையே மீண்டும் வில்லனாக நடிக்கவைத்தனர். ஆனால் அந்த படம் தமிழில் பெற்ற வெற்றியை தெலுங்கில் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
