பெண்கள் சுயதொழில் தொடங்க குறைந்த வட்டியில் ரூ.1.25 லட்சம் வரை கடன் வழங்கும் அரசு… எப்படி பயன்பெறுவது..?

By Nanthini on பங்குனி 9, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் பலரும் சொந்தமாக தொழில் தொடங்கி தொழில் முனைவோர்களாக விரும்புகிறார்கள். அவர்களுக்கு நிதி உதவி வழங்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் சூப்பரான கடன் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி புதிய குழு கடன் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. குழு படங்கள் சுய உதவிக் குழு சார்பாக வழங்கப்படுகின்றது. அதிகபட்சமாக 1.25 லட்சம் ரூபாய் வரை சுய உதவி குழுவில் உறுப்பினராக இருக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.

   

இந்த கடனுக்கான மொத்த ஆண்டு வட்டி விகிதம் 6% ஆகும். இரண்டரை ஆண்டுகள் காலக்கெடுவுக்குள் இந்த கடன்களை திருப்ப செலுத்த வேண்டும். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் வழங்கப்படும் இந்த கடனை பெறுவதற்கு சுய உதவி குழுவில் உறுப்பினராக இருப்பது அவசியமாகும். அதிகபட்சமாக 20 உறுப்பினர்கள் கொண்ட சுய உதவிக் குழு தொடங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் 18 முதல் 60 வயது வரை உடையவராகவும் அவருடைய ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருப்பது அவசியம்.

   

 

இந்த திட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே கடன் பெற முடியும். ஆன்லைன் மூலம் டாப்செட் கோவின் www.tabcedco.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, பிறப்பிடச் சான்றிதழ் மற்றும் ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்களை சமர்ப்பித்து இதற்கு விண்ணப்பிக்கலாம். சீர் மரபினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று ஆஃப்லைன் மூலமும் விண்ணப்பித்துக் கொள்ளும் வசதி உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் வழங்கும் புதிய திட்டம் ஒன்றையும் தமிழக அரசு அறிமுகம் செய்து வைத்தது. பெண்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை சார்பாக 50,,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டு வரும் நிலையில் ஆதரவற்ற மற்றும் நலிவுற்ற பெண்கள், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்கள் நிதி உதவி பெறலாம். விண்ணப்பதாரர் தங்கள் மாவட்ட சமூக அலுவலர் அணுகி ஐம்பதாயிரம் ரூபாய் சுய தொழில் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்