கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதில் தகுதியுடைய பெண்களுக்கு உதவி தொகை வழங்கப்படும் நிலையில் பலருக்கும் இன்னும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் உள்ளது.
இதனால் தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக மீண்டும் மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக தகுதி உள்ள பெண்கள் அனைவரும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் விரைவில் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிகிறது. இந்த முகாம்கள் பல மாவட்டங்களில் நிறைவடைந்திருப்பதால், மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க முடியாமல் கடைசி நேரத்தில் பலரும் தவித்து வருகின்றனர். இந்தநிலையில் அவர்களுக்கு நல்வாய்ப்பாக, வாரந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் முகாமில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க மனு கொடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
